13.7.11

பாவியாக்கும் பராஅத் இரவும் மறுத்துரைக்கும் மத்ஹபு நூல்களும்.

லைலத்துல் பராஅத், பராஅத் இரவு, ஷபே பராஅத் என்று பல பெயர்களில் கொண்டாடப்பட்டுவரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்பார் இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது.‘லைலத்துல் கத்ரு, லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்ற சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.
பின் ஏன் இந்த இரவைக் கொண்டாடுகிறார்கள்?
இந்த இரவைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைப்பற்றி நமது மக்களின் நம்பிக்கை என்ன? அவர்கள் இதை கொண்டாடுவதற்குக் கூறும் காரணங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
1. பராஅத் இரவு
பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம். (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த வசனம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளான பராஅத் இரவைக் குறிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
‘பாக்கியம் மிக்க இரவு’ எது என்பதை வேறு சில வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
‘திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது’என்று திருக்குர்ஆன் 2:185-வது வசனம் கூறுகிறது.
இதிலிருந்து இந்த பாக்கியம் மிக்க இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது என்று மிகத் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். அது ரமளானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவுpல்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்ற ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும்,’லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமளான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகிறது.
எனவே அந்த இரவு ஷஃபானின் 15-வது இரவு என வாதிடுவோருக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு திருக்குர்ஆன் ஷஃபானின் 15-வது இரவில் அருளப்பட்டது எனக் கூறுவது ‘ரமளானில் தான் குர்ஆன் அருளப்பட்டது’ என்ற இறைவனின் சொல்லுக்கு மாற்றமானதாகும்.
44:03 என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பராஅத் என்று ஒரு இரவை முஸ்லிம்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து சிலர் அல்லாஹ்வின் வசனத்திற்கு பொருத்த மற்ற விளக்கம் கொடுத்து அந்தநாளுக்கென சிலசடங்குகளை உருவாக்கி அறியாத மக்களை தவறான வழிகளில் வழிநடத்துகின்றனர்.
அடுத்து, ஷஃபான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவதும் ‘ரமளானில் அருளப்பட்டது’ என நம்புவதற்கு எதிரானதாகும்.
ஷஃபானில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்போர் மேலும் சில காரணங்களை முன் வைக்கின்றனர். அதாவது:-
குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளபட்டது ஒரு இரவு. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்த நபிமொழியும்; சான்றாக இல்லை. இந்த இரவுக்கும் பராஅத் இரவுக்கும் சம்பந்தமே இல்லை.
2. மனிதனின் விதி
இந்த இரவில் தான் மனிதனின் விதி நிர்ணயிக்கப் படுகிறது என்று நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் என உத்மான் பின் முஹம்மது பின் முகீராஅறிவிக்கிறார்கள் என்ற ஒரு நபிமொழியை பராஅத் இரவின் மாண்புக்கு ஆதாரமாகமுன் வைக்கின்றனர்.இந்த அறிவிப்பாளர் தாபியீன்களில் இறுதியானவர் என்றும்,தபஉத் தாபியீன்களைச்சார்ந்தவர் என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. இந்த ஹதீஸில் ஸஹாபியின்தொடர்விட்டுப் போனதால் இந்த நபி மொழி ஏற்கத்தக்கதல்ல.
3. ஆடுகளின் முடிஅளவு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள்,
‘ஷஃபானில் வரும் பராஅத் இரவின் பாதியில் இறைவன் கீழ் வானத்தில் இறங்கி பனீ கலபு கூட்டத்தினரின் (ஆயிரமாயிரம்) ஆடுகளுக்கு இருக்கும் உரோமங்களின் எண்ணிக்கையிலும் அதிகமானவர்களை மன்னிப்பான் என்றும் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான் என்றும் கூறினார்கள்’

என்னும் நபிமொழியை ஆயிஷh(ரலி)அவர்கள் அறிவித்ததாகக் கூறுகின்றனர். (அறிவிப்பவர்: உர்வா அவர்கள்) இந்த நபி மொழியை அபூகதீர் என்பவர் யஹ்யாவிடமிருந்தும், யஹ்யா என்பவர் உர்வாவிடமிருந்தும், உர்வா என்பவர் இதை அறிவிப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் எவரும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் இந்த ஹதீஸும் ஏற்பதற்கில்லை.
4. அடுத்து, பராஅத் நோன்பு
ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன.இதை அறிவிக்கும் அபூ ஸப்ரா பின் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் பொய்யர் என இமாம் அஹ்மத் அவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில்; ஷஃபானின் பாதி வந்தால் நோன்பு வைக்கக்கூடாது என வருகிறது.
மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.எனவே பராஅத் இரவுக்கென தனியாக நோன்பு எதுவும் கிடையாது.
இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹபு நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

5. விஷேச ஆராதனைகள்,யாஸீன்கள்,ராத்தீபுகள்.
1.முதலில் மூன்று யாஸீன்கள்:-
இந்த இரவில் அடுத்தடுத்து விசேச வணக்கங்கள் தொடர்ந்து
நடை பெற்றுக்கொண்டிருக்கும்.

முதலாவதாக மஃரிப் தொழுததும் மூன்றுயாஸீன்கள் ஓதிஹதியா செய்யவேண்டும் என முல்லாக்கள் கூறி அதைவியாபாரமாக்கி விட்டார்கள்.  எனவே போட்டி போட்டுக்கொண்டு,

  • .பாவ மன்னிப்பிற்கும்
  • . ரிஸ்கு-இரண பாக்கியத்திற்கும்
  • . நீண்ட ஆயுளுக்கும்
என மூன்று யாஸீன்கள் ஓதுவார்கள்.
2. அடுத்து ஆங்காங்கே திக்ருகள், ராத்தீபுகள், குத்பிய்த்துகள்,
மவ்லிதுகள் என வரிசையாக நடைபெறும்.

மார்க்கத்தின் பெயரால் நடக்கும் இந்தப் போலிச் சடங்குகளுக்கு
எந்த ஆதாரமும் கிடையாது.

6. விஷேச உணவு படைப்புகள் 
இந்த இரவில் அல்லாஹ் வின் அருள் பெருகிடவும் உணவு பாக்கியங்கள் பெற்றிடவும் ஊருக்கேற்றாற் போல் பல் வேறு விதமான பலகாரங்களையும், உணவுகளையும் படைத்து அமர்க்களப்படுத்து வார்கள். (யாஸீன் ஓதியவர்களை மகிழ்விக்கத்தான்.)
7. கப்று ஸியாரத்
இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற்றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியாரத்,பிரார்த்தனைகள் நடை பெறும்.
8. விஷேச வணக்கங்கள்:- 
முதல் தொழுககை : இஷாத் தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா வுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.
இரண்டாவது தொழுகை: இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 30 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
மூன்றாவது தொழுகை : இஷாத் தொழுகைக்கு பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 12 ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.
நான்காவது தொழுகை : இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 100 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் 100 ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் 100 தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஐந்தாவது தொழுகை : தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸீம் கிடையாது.
இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்றுக் கொள்வார்கள்.
மார்க்கத்தின் பெயரால் உலா வரும் இந்தப் போலிச் சடங்குகளையும் பித்அத்களையும் இவர்கள் ஏற்றிருக்கும் மத்ஹபு கிதாபுகள் கூட வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP