22.10.11

அருவமானவனா இறைவன்?

அல்லாஹ் உருவமற்றவனா?

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.
உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள். என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படுவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அருளப்பட்ட திருக் குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்று தான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும்.
அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையில் முகம் என்று பொருள் கொடுப்பதா? அல்லது இலக்கியமாக, முகம் என்பது திருப்தியையும், பார்வை என்பது கண்காணிப்பையும் குறிக்கும் என்று பொருள் கொடுப்பதா? என்பதில் முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகின்றது.
எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு முதலில் அகராதிப் பொருள், அதாவது அதன் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இது எல்லா மொழியிலும் உள்ள விதியாகும். அரபு மொழிக்கும் இது தான் சட்டமாகும்.
திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 5:38
இந்த வசனத்தில் கையை வெட்டுங்கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். கையை வெட்டுங்கள் என்றால் அவனது பலத்தைக் குறைத்தல் என்று மாற்றுப் பொருள் கொடுக்கக் கூடாது.
உமது கையைக் கழுத்தில் கட்டப் பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு, அமர்ந்து விடுவீர்!
அல்குர்ஆன் 17:29
இந்த வசனத்தில் கழுத்தில் கையைக் கட்டிக் கொள்ளாதேஎன்று கூறப்படுவதற்கு, நேரடிப் பொருள், கொடுத்தால் பொருந்தாது. இது போன்ற கட்டங்களில், அந்த வார்த்தை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து, முன் பின் வாசகங்களை ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பொருளாதாரம் பற்றி பேசப்படுகின்றது. எனவே கையைக் கழுத்தில் கட்டிக் கொள்ளாதே என்பது கஞ்சத்தனம் செய்யாதே என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது புறச்சான்றின் அடிப்படையில் வார்த்தையின் அர்த்தத்தை முடிவு செய்ய வேண்டும். இதற்கு அரபியில் கரீனா என்று பெயர்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.
தெளிவான அரபி மொழியில் இந்த வேதத்தை இறக்கியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அரபு மொழி வழக்கில் மற்ற வார்த்தைகளை எப்படிப் பொருள் கொள்வோமோ அதே அளவுகோலைத் தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த வசனங்களுக்கும் கொள்ள வேண்டும்.
ஒரு வசனத்தில் அல்லாஹ்வின் முகம் என்று கூறப்படுமானால், முதலில் அதன் நேரடிப் பொருளைப் பார்க்க வேண்டும். அது பொருந்தாத சமயத்தில் அந்த வசனத்தின் முன் பின் விஷயங்களைக் கருத்தில் கொண்டு அதற்குத் தக்க மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.
அல்குர்ஆன் 55:27,28
இந்த இடத்தில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் அழிந்து விடும், அவனது திருமுகம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ்வின் முகம் என்ற நேரடிப் பொருள் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.
அதே சமயம் கீழ்க்கண்ட வசனத்தைப் பாருங்கள்.
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 30:38
இந்த வசனத்தில் அல்லாஹ்வின் முகத்தை நாடி தர்மம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் அல்லாஹ்வின் முகம் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாது. எனவே அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்று பொருள் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்தில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.
அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று இடம் பெறும் அனைத்து வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுக்காமல் மாற்றுப் பொருள் கொடுத்து, அதன் காரணமாக அல்லாஹ்வுக்கு உருவமே கிடையாது என்று ஒரு சாரார் வாதிக்கின்றனர்.
அல்லாஹ்வின் உறுப்புகள் குறித்து இடம் பெறும் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் நேரடிப் பொருள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறி அதன் மூலம் இஸ்லாத்தில் முரண்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை ஒரு சாரார் ஏற்படுத்துகின்றனர்.
எனவே இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்றாக வேண்டும். அதற்காகவே இந்தத் தொடர். அல்லாஹ் எங்கிருக்கின்றான்? அவனுக்கு உருவம் உள்ளதா? அந்த உருவத்தை அனைவரும் பார்க்க முடியுமா? யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? என்பன போன்ற விளக்கங்களை இதில் தரவுள்ளோம்.
உருவமற்ற இறைவனா?
உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்; உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்
இவை நாகூர் ஹனீஃபாவின் வரிகளாகும். இஸ்லாமிய கடவுள் கொள்கையைப் புரியாததால் இவ்வாறு இறைவனை உருமற்றவன் என்று கூறியிருக்கின்றார். இதற்கு அவர் மட்டும் காரணமாக இருக்க மாட்டார். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் படித்தால் தான் மார்க்கத்தை விளங்க முடியும் என்று பறை சாற்றும் ஆலிம்களும் காரணமாவர்.
அவர்கள் தான் அல்லாஹ் உருவமற்றவன் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வகையில் இஸ்லாமிய கடவுள் கொள்கையில் இவர்கள் சுத்த சூன்யங்களாக - அறியாமை மையங்களாக உள்ளார்கள். இறைவன் பற்றிய விபரத்தை விளங்குவதில் இவர்களே இப்படி இருட்டில் இருக்கையில் நாகூர் ஹனீபாவைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.
ஆனால் நிச்சயமாக அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் இருக்கின்றது. இதற்கு அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன்
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.
அல்குர்ஆன் 55:27,28
இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கென்று ஒரு முகம் உள்ளது என்பதை அறிந்தோம். இது மட்டுமன்றி வேறு பல வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்.
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும் நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத் தூதரும் தன் சமுதாயத்திற்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3057
(மேலும் பார்க்க: புகாரி 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407 மற்றும் முஸ்லிம் 247)
இந்த ஹதீஸ்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.
அல்குர்ஆன் 58:1
(மேலும் பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)
இந்த வசனங்களில் அல்லாஹ் தன்னை செவிப்புலன் உள்ளவன் என்பதை விளக்குகின்றான்.
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.
அல்குர்ஆன் 4:164
இந்த வசனத்தில், தான் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் அவன் பேசுபவன்என்று சொல்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப் படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர்த் தியாகியாகி விடுகின்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2826
(மேலும் பார்க்க: புகாரி 806, 7438 மற்றும் முஸ்லிம் 278)
இந்த ஹதீஸ்கள் ரப்புல் ஆலமீனின் சிரிப்பை வர்ணனை செய்கின்றன.
பார்வை, செவியுறுதல், பேசுதல், சிரித்தல் ஆகிய பண்புகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் அவனது திருமுகத்தைக் கூறுகின்ற வசனங்களையும் ஹதீஸ்களையும் இது வரை கண்டோம்.
அல்லாஹ்வின் மற்ற உறுப்புகள் பற்றி இடம் பெற்றுள்ள ஆதாரங்களைப் பார்ப்போம்.
“"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.
அல்குர்ஆன் 5:64
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கைகள் என்பது தாராளத்தன்மைக்காக கூறப்பட்டாலும் பின்வரும் வசனத்தில் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்
அல்குர்ஆன் 38:75
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், ‘‘இன்னும் அதிகம் இருக்கின்றதா?’’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘‘போதும், போதும்’’ என்று கூறும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 4848, 4849, முஸ்லிம் 5084
படைத்த இறைவனின் பாதங்களைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வும் தனக்குப் பாதங்கள் இருப்பதாகப் பறை சாற்றுகின்றான்.
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.
அல்குர்ஆன் 67:42
தன்னிகரற்ற தனி நாயன்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஆதாரங்கள், அகில உலகத்தைப் படைத்து, பாதுகாத்து, இரட்சிக்கும் அவனுக்கென்று ஒரு தோற்றம் - ஓர் உருவம் உள்ளது என்று பிரகடனப்படுத்துகின்றன.
ஆனால் அவனது அந்தத் தோற்றத்திற்கு - அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாது; ஒப்புவமை இல்லை.
அவனைப் போல் எதுவும் இல்லை.
அல்குர்ஆன் 42:1
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு யாரும் ஒப்பாக மாட்டார். எதுவும் ஒப்பாகாது. அவனுக்கு ஈடு இணை இல்லை என்று இந்த வசனத்தில் உறுதி படக் கூறுகின்றான்.
இதே கருத்தை திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகின்றது.
"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!  அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை
அல்குர்ஆன் 112:1-4
எனவே இது வரை கண்ட இந்த ஆதாரங்களிலிருந்து அல்லாஹ்வுக் கென்று தன்னிகரற்ற, ஒப்புவமை இல்லாத, ஈடு இணையற்ற ஒரு தனித் தன்மை கொண்ட தோற்றம் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும் அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், கைகள், கால்கள் இருக்கின்றன என்று வரும் வார்த்தைகளுக்கு அதற்குரிய நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க வழியில்லாத பட்சத்தில் தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்குக் கண்களா? அவனுக்குக் கை, கால்களா? நமக்கு இருக்கும் உறுப்புக்களை அல்லாஹ்வுக்கு இருப்பதாக எப்படிச் சொல்லலாம்? என்று கற்பனை செய்து கொண்டு இவற்றுக்கு வேறு பொருள் கொடுக்க மாட்டோம்.
அதாவது கண் என்றால் கண்காணிப்பு; கை, கால்கள் என்றால் அவனது ஆற்றல்கள் என்று மாற்றுப் பொருள்கள், வேறுபட்ட அர்த்தங்கள் கூற மாட்டோம். அதற்குரிய நேரடியான, உள்ளது உள்ளபடியான அர்த்தத்தைத் தான் கொடுப்போம். கண் என்றால் கண் தான். கை என்றால் கை தான்.
இப்படி ஒரு விளக்கத்தை இங்கு நாம் குறிப்பிடக் காரணம், அல்லாஹ்வின் பண்புகளில், தன்மைகளில் அறிவு ரீதியிலான விளக்கம் கொடுப்பவர்கள் இவர்கள் என்று நம்மை நோக்கி வஞ்சக எண்ணத்தோடு, குரூர சிந்தனையோடு குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதில் வேடிக்கை என்னவெனில், நம்முடன் இருக்கும் போது கருத்துக்கு எதிராக நாவுயர்த்திப் பேசவில்லை. எதிர்க் கருத்தை நம்மிடம் நேரடியாகக் கூறவில்லை. மாறாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இயக்க ரீதியான பந்தம் அறுந்தவுடன் இந்தக் குற்றச்சாட்டை நம் மீது எறிகின்றார்கள்.
அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.
அல்குர்ஆன் 7:54
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
அல்குர்ஆன் 20:5
இந்த வசனங்களிலும் 10:3, 13:2, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன்.  யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன்.  யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1145
(மேலும் பார்க்க:  புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)
இந்த ஹதீஸில் அல்லாஹ் முதல் வானத்திற்கு ஒவ்வொரு நாள் இரவிலும் இறங்குகின்றான் என்ற கருத்து இடம் பெறுகின்றது.
கடந்த கால மக்களிடம் இந்தக் கருத்து முன் வைக்கப்படும் போது அவர்களுக்கு இதில் எந்த ஐயமும் ஏற்பட அறவே வாய்ப்பில்லை. ஆனால் பூமி 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கின்றது என்று அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட பின்பு இந்தக் கருத்தில் சந்தேகம் ஏற்படுகின்றது.
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றானா? அல்லது முதல் வானத்தில் இருக்கின்றானா? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் ஏன் உருவாகின்றது? சுழல்கின்ற பூமியில் இரவின் கடைசிப் பகுதி என்பது ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் ஏற்படுவது கிடையாது. 24 மணி நேரமும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி விடுகின்றான் என்றால் 24 மணி நேரமும் அல்லாஹ் முதல் வானத்தில் தான் இருக்கின்றான் என்றாகி விடும். அதாவது அர்ஷில் அவன் இல்லை, அர்ஷ் காலியாக உள்ளது என்ற கருத்து வந்து விடும். இங்கு குர்ஆன் கூறும் கொள்கை ரீதியான விளக்கத்திற்கு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மோதுவதாக அமைகின்றது.
உண்மையில் ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் குர்ஆனுடன் முரண்படாது. இங்கு மோதுவது போல் தோன்றுகின்றது என்றால் நமது புரிந்து கொள்ளும் தன்மையில் கோளாறு என்று எடுத்துக் கொண்டு இந்த ஹதீசின் சரியான விளக்கத்தை நாம் தேடியாக வேண்டும்.
சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள்
அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்றால் அல்லாஹ் நமது கோரிக்கையை மிக விரைந்து ஏற்றுக் கொள்கின்றான் என்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களாகின்றோம். இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்தவுடன் நம்மை சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள் என்பது போல் நமக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நமக்குப் பின்னால் பேசும் இவர்களிடம் நாம் கூறுவதெல்லாம், ‘எங்களுக்குப் பின்னால் வாய் கிழியப் பேசும் நீங்கள் எங்களுக்கு முன்னால் வந்து பேசுங்கள்என்பது தான்.
ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் அவ்வாறு வருவதில்லை. இதிலிருந்து யார் சத்தியத்தை விட்டும் சறுகியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இவர்களின் சலசலப்புக்கெல்லாம் நாம் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை; அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.
நமக்கு சத்தியமென்று தெரிகின்ற விஷயத்தை ஊருக்கு அஞ்சி, உலகுக்கு அஞ்சி, சவூதிக்கு அஞ்சி போட்டுடைக்கத் தயங்கியதில்லை. அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீசுக்கு இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கின்றோம். இல்லையெனில் குர்ஆன் வசனத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மோதுகின்றது என்ற தோற்றம், மற்றவர்களிடம் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்க்கத் தான் மேற்கண்ட விளக்கம்.
இது மாதிரி நெருடலான இடங்களில் இது போன்றதொரு விளக்கம் கொடுக்கப்படுவது புதிதான ஒன்றல்ல. இவர்களாலும் நம்மாலும் மதிக்கப்படும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இது போன்ற நெருடலான ஒரு விஷயத்தில் கொடுத்த ஒரு விளக்கத்தை இங்கு கோடிட்டுக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்.
அல்குர்ஆன் 57:4
இந்த வசனத்தின் படி அல்லாஹ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருக்கின்றான் என்ற தவறான கருத்து இங்கு பெறப்படுகின்றது. இதற்கு மறுப்பு கூற வந்த இப்னு தைமிய்யா அவர்கள், ‘நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்என்ற வசனத்தின் படி அல்லாஹ் படைப்பினங்களுடன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்று பொருள் கொண்டு விடக் கூடாது. அப்படி ஒரு கருத்தை இந்த வார்த்தை நடை தரவில்லை. இது (இந்த அத்வைதக் கொள்கை) அல்லாஹ் படைத்த இயற்கையான அமைப்பிற்கு நேர் எதிரானது, நம் முன்னோர்கள் கொண்ட ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் முரணானது.
வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சந்திரன் ஊரில் தங்கியிருப்பவர்களுடனும் இருக்கின்றது, பயணியுடனும் இருக்கின்றது என்று சொல்லும் போது, ஊரில் இருப்பவருடன் சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ அல்லது பயணத்தில் இருப்பவருடன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ எடுத்துக் கொள்ள மாட்டோம். இதில் இடம் பெற்றுள்ள உடன்என்ற வார்த்தைக்கு சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். அது போலத் தான் மேற்கண்ட வசனத்தின் பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கிறான். அதே சமயம் நம்முடனும் இருக்கிறான் என்ற கருத்தை இந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் அதனதன் பொருளின் அமைந்து, மாற்றி - திரித்துக் கூறுவதற்கு அவசியமின்றிப் போகின்றது.
அல்அகீதத்துல் வாஸிதிய்யா என்ற நூலில் இப்னு தைமிய்யா அவர்கள் இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்க முன் வந்ததற்குக் காரணம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அல்லாஹ் அடியார்களுடன் இருக்கிறான் என்ற சூஃபிஸக் கருத்தை உடைப்பதற்காகவும் தான் என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
சொல்லப்படும் செய்தியில் ஒரு கருத்து மற்றொரு கருத்துடன் மோதுவது போல் தோன்றுகின்ற போது அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து அந்தச் சந்தேகத்தை நீக்குவது அந்தத் துறையில் ஈடுபடுவோர் மீது கட்டாயக் கடமையாகும்.
இங்கே ஒரு சிலர் அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான், முதல் வானத்திற்கும் இறங்குகின்றான் என்று அப்படியே விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு இரண்டும் முடியும் அல்லவா? என்பது போல் தங்கள் வாதங்களை வைக்கின்றனர்.
இத்தகையோர் இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை.
முரண்பாடு, அசாத்தியம் என்று எதை ஆக்கி விட்டானோ அந்த விஷயத்தில் அவன் எதுவும் மாற்றம் செய்வதில்லை.
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது.
அல்குர்ஆன் 35:19-21
இந்த வசனங்களில் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களைச் சொல்லி இது ஒரு போதும் ஒன்றாகாது என்று கூறுகின்றான். முரண்பாடு என்றால் என்ன என்று விளக்குகிறான்.
அதாவது குருடன் என்றால் குருடன் தான் பார்வையாளன் என்றால் பார்வையாளன் தான். ஒருவன் குருடனாக இருந்து கொண்டே பார்வையாளனாக இருப்பது முரண் என்ற இயற்கை விதியை நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்த இயற்கை விதியின் படி, தான் ஏகன்; ஒருவன்; தன்னிகரற்றவன் என்பதை நிரூபிக்கிறான். ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்தால் அது இன்னொரு இடத்தில் இருக்க முடியாது என்பது தான் அவன் கற்றுத் தரும் இயற்கை விதி.
அந்த இயற்கை விதியின் அடிப்படையில் அவன் அர்ஷில் தான் இருக்கிறான். அவன் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. அதாவது அவன் நிர்ணயித்த அந்த விதிக்கு அவன் ஒரு போதும் முரண்படுவதில்லை.
எனவே நம்முடைய அறிவின் அடிப்படையில் இல்லாமல், அல்லாஹ் விதித்த இயற்கை விதியின் அடிப்படையில் தான் அவன் அர்ஷிலிருந்து வானத்திற்கு வர முடியாது என்று கூறுகின்றோம். அதாவது அர்ஷிலும் முதல் வானத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று கூறுகிறோம்.
அடுத்து, அவன் அசாத்தியம் என்று எதைக் கூறி விட்டானோ அவன் சக்தியைப் பயன்படுத்தி சாத்தியமாக்குவதில்லை.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
அல்குர்ஆன் 7:40
இங்கு ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று அவன் அசாத்தியமாக்கி விட்டான். அப்படி ஓர் இயற்கை விதியை நிர்ணயித்து விட்டான். அதற்கு அவன் மாறுபட மாட்டான்.
இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
இறை மறுப்பாளர் சொர்க்கம் செல்வார்என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அல்லாஹ் இன்னின்ன வசனங்களில் இறை மறுப்பாளர்களுக்கு நிரந்தர நரகம் என்றல்லவா சொல்கிறான்! அவர் எப்படி சொர்க்கம் செல்ல முடியும்என்று நாம் அவரிடம் திருப்பிக் கேட்கிறோம். அதற்கு அவர், ‘ஊசிக் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சக்தி பெற்றவன். எனவே அவன் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து இறை மறுப்பாளனை சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என்று பதில் சொல்கின்றார் என்றால் அதைப் பைத்தியக்காரத் தனமான வாதம் என்போம். அதற்கு ஆதாரமாக, அல்லாஹ் அசாத்தியமாக்கியதை சாத்தியமாக்குவதில்லை என்ற நியதியையும் கூறுவோம்.
அல்லாஹ் அர்ஷில் இருந்து கொண்டு முதல் வானத்திற்கு இறங்கும் ஆற்றல் பெற்றவன் என்று கூறுவோருக்கும் இதையே நாம் பதிலாகக் கூறுகிறோம். அவன் முரண்பாடு என்று ஆக்கிய இயற்கை விதியில் அவன் ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை, உறுதியாக மாற்றம் செய்ய மாட்டான். இது முதல் அடிப்படை.
அடுத்து இந்தக் குர்ஆனை தன்னுடைய வேதம் தான் என்பதற்கு சிறந்த சான்றாக சமர்ப்பிப்பது முரண்பாடின்மை தான்.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்
அல்குர்ஆன் 4:82
ஒரு நூலில் முரண்பாடு இருந்தால் அது வேதமல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றான். இது இரண்டாவது அடிப்படை.
இந்த அடிப்படையின் படி அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகளுக்கு இடமில்லை. நாம் விளங்குவதில் தான் கோளாறு இருக்க வேண்டும்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் முதல் வானத்திற்கு வருகிறான் என்று ஹதீஸ் கூறுகின்றது. (அதுவும் வஹீ தான்)
இது முரண்பாடு போல் தோன்றுகிறது. எனவே அதற்குரிய விளக்கம், அல்லாஹ், அடியார்களுடைய தேவையை விரைந்து நிறைவேற்றுகிறான் என்பது தான் என்று கூறுகிறோம்.
எனவே இந்த அடிப்படையையும் அதற்கான விளக்கத்தையும் தெரிந்து கொண்டால் அவர்கள் இந்த வாதத்தை முன் வைக்க மாட்டார்கள்.
அல்லாஹ் கட்டடங்களுக்கு அடியில் வருவானா?
இங்கு இவர்களிடம் இன்னொரு விஷயத்தை முன் வைக்கிறோம். அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் வேறு விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதில் நாம் மாறுபடவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மாற்று விளக்கம் கொடுத்தாக வேண்டும். அந்த இடங்களில் மாற்று விளக்கம் கொடுக்காமல் இருக்க முடியாது. இவர்களும் அது போல் மாற்று விளக்கம் கொடுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் நாம் அது போன்று விளக்கம் கொடுத்தால் நமக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நாம் அவர்களிடம் கேட்பது,
அவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். மேலேயிருந்த முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத வகையில் அவர்களிடம் வேதனை வந்தது.
அல்குர்ஆன் 16:26
இந்த இடத்தில் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள்? மாற்று விளக்கம் கொடுக்காமல் அதே விளக்கம் கொடுத்தால் அல்லாஹ் கட்டடத்தின் அடித்தளத்திற்கு வருகிறான் என்றாகி விடும். எனவே இதற்கு நிச்சயம் இந்த விளக்கம் கொடுக்க முடியாது.
மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வும், வானவர்களும் வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும்.
அல்குர்ஆன் 2:210
இந்த வசனத்திற்கும் அதே விளக்கம் கொடுக்க முடியாது. வேறு விளக்கம் தான் கொடுத்தாக வேண்டும். அவர்கள் மாற்று விளக்கம் கொடுத்தால் தப்பில்லை. நாம் கொடுத்தால் தப்பு? அப்படியானால் இதில் தெரிய வருகின்ற பகிரங்கமான உண்மை, ஒரு தனி நபர் மீது கொண்டிருக்கும் வெறுப்பு அவர்களை இவ்வளவு தொலைவுக்கும், தலை கீழ் நிலைக்கும் கொண்டு செல்கிறது.
இதற்கு நாம் கவலைப்படப் போவதில்லை. மேலும் அல்லாஹ் இவர்களின் சதி வலைகளை, பொய் செய்தி அலைகளைத் தொடர்ந்து முறியடித்துக் கொண்டிருக்கிறான் என்பது நாம் நிதர்சனமாகக் கண்டு வரும் உண்மையாகும்.
எனவே இங்கு நாம் தெளிவாகத் தெரிவிப்பது என்னவெனில், அல்லாஹ்வின் பண்புகளில் மாற்று அர்த்தம் கொடுக்கக் கூடாது, அதன் இயற் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவனது பண்புகளைக் கூறும் இடத்தில் எங்கு முரண்பாடு ஏற்படுவது போல் தோன்றுகிறதோ அங்கு எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் விளக்கத்தைக் கொடுத்தாக வேண்டும். இது தான் நமது நிலைபாடாகும்.
இந்த அடிப்படையில் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று ஓர் அழகிய திருமுகம், கண்கள், செவிப் புலன்கள், பேசும் ஆற்றல் உள்ளன என்று விளங்கிக் கொள்கிறோம்.
இப்படி ஒரு புனிதத் தோற்றம் இருப்பது உறுதியான பின் நாம் அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் அலை போல் கிளம்புவது இயல்பானது தான். அத்தகைய புனித தோற்றமுடையவனை நாம் எங்கே காணலாம்?
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். தங்கள் வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:1,2)
மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள் கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை' என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.
"மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில் கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த அடிப்படையில் இவ்வசனம் அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான் இவ்வாறு பொருள் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு பொருள் செய்ய முடியாது.
நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்! வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)
(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: முஸ்லிம் 287
இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.
அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.
"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா
நூல்: திர்மிதீ 3201
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்
அறிவிப்பவர்: அபுல் ஆலியா
நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை.
பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 53:13 வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். "நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும் அடிபட்டுப் போகின்றது.
தூதரிடம் தோழர் கண்ட பேட்டி
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர் (ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204
அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 293
இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண இயலாமல் ஆனார்கள்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள் தூளாக்கி விட்டது.
ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை
உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.
இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது 375லிருந்து 775 நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும் வடி கட்டி விடுகின்றன.
அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய் விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல்.
இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும்.
இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின் இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
நினைவுலகமும் கனவுலகமும்
aநினைவில் - நேருக்கு நேரில் - அல்லாஹ்வைக் காண முடியாது என்பதை விரிவாகக் கண்டோம்.
அவனைக் கனவில் காண முடியுமா? என்றால் அதுவும் சாத்தியமில்லை என்பதே பதிலாகும்.
மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.
ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது.
மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவிப்புச் செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாகக் காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல் நிறைந்த கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்று ஒரு செய்தி சில நூற்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
ஒரு நாள் சுப்ஹு தொழுகையின் போது சூரியனின் உதயத்தை நாங்கள் கண்டு விடுவோம் என்ற அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏதோ ஒரு காரியம் தடுத்து விட்டது. திடீரென்று புறப்பட்டு வந்தார்கள். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஸலாம் கொடுத்ததும் தம் குரலால் அழைத்து "நீங்கள் உங்கள் வரிசைகளில் இருப்பது போல் அப்படியே இருங்கள்'' என்று சொன்னார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, இன்று காலை உங்களிடம் வராமல் தடுத்து வைத்திருந்த காரியத்தை உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இரவில் உளூச் செய்து விட்டு எனக்கென்று நிர்ணயமான அளவு தொழுதேன். அப்போது நான் என் தொழுகையில் கண்ணயர்ந்தேன். எனக்கு அது பாரமாக அமைந்தது. அப்போது நான் அழகிய தோற்றத்தில் உள்ள பாக்கியமிக்க உயர்ந்த எனது இறைவனுக்கு முன்னிருந்தேன். அவன், முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு நான், "என் இறைவா! லப்பைக்க! (இதோ வந்து விட்டேன்)'' என்று கூறினேன். அவன், "உயர்மட்டக் குழு (வானவர்கள்) எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். "என் இறைவா! எனக்குத் தெரியாது'' என்றேன். இவ்வாறு அவன் மூன்று தடவை கேட்டான்.
அப்போது அவன் இரு புஜங்களுக்கிடையே தன் முன்னால் கையை வைக்கக் கண்டேன். என் மார்புகளுக்கு இடையே அவனது விரல்களின் இதத்தை உணரும் அளவுக்கு அது அமைந்திருந்தது. எனக்கு எல்லாமே காட்சியளித்தது. நான் அறிந்து கொண்டேன். அப்போது அவன் உயர்மட்டக் குழு எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று கேட்டான். பரிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்றது என்று நான் பதிலளித்தேன். அவை என்னவென்று அவன் கேட்டான்.
"ஜமாஅத் தொழுகையை நோக்கி பாதங்கள் நடப்பது, தொழுகைக்குப் பின் மஸ்ஜிதில் அமர்வது, சிரமமான கட்டங்களில் உளூவை நிறைவாகச் செய்வது'' என நான் சொன்னேன். பிறகு எது தொடர்பாக என்று கேட்டான். "உணவளித்தல், இதமாகப் பேசுதல், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதல்'' என்று பதிலளித்தேன்.
"யா அல்லாஹ்! நன்மைகள் புரிவதையும் தீமைகளை விடுவதை யும் ஏழைகளை நேசிப்பதையும் ஏழைகளின் நேசத்தையும் எனக்கு மன்னிப்பளித்து அருள் வழங்குவதை யும் உன்னிடத்தில் கோருகின்றேன். நீ ஒரு சமுதாயத்தைச் சோதிக்க விரும்பினால் என்னை அந்தச் சோதனையில் ஆட்படுத்தாது மரணிக்கச் செய்! உனது நேசத்தையும் உன்னை நேசிப்பவரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் வணக்கத்தை நேசிப்பதையும் உன்னிடத்தில் கோருகின்றேன் என்று சொல்- கேட்பீராக!'' என்று அவன் கூறினான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை சத்தியமாகும். இவற்றைப் பாடமாக்கிக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ர-)
நூல்கள்: திர்மிதீ 3159,அஹ்மத் 21093
இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் ஹாயிஷ் அல் ஹள்ரமி என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. சிலர் இவரை நபித்தோழர் என்றும், தாபியி என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவருக்கு ஒரேயொரு ஹதீஸ் தான் இருக்கிறது, ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவருடைய விஷயத்தில் குழப்பத்தில் இருக்கிறார் கள் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: இஸாபா)
இதனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் தமது இலல் என்ற நூலில் இது தொடர்பான அறிவிப்புக்கள் அனைத்தையும் கொண்டு வந்து இதில் எதுவுமே சரியான ஹதீஸ் இல்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.
இதே போன்று இமாம் பைஹகீ அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்இலல் முதனாஹியா)
எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்பது ஆதாரமற்றதாகும்.
அபூஹனீபா அல்லாஹ்வைக் கனவில் கண்டார்களா?
நான் கண்ணியமிக்க இறைவனை 99 தடவை கனவில் கண்டேன். நிறைவாக நூறாவது தடவை அவனைக் காணும் போது, "படைப்புகள் எதன் மூலம் இறுதி நாளில் அவனுடைய வேதனையி லிருந்து விமோசனம் பெற முடியும்? என்று கேட்கப் போகின்றேன்'' என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது போலவே நான் (நூறாவது தடவை) கண்டேன். அப்போது, "என் இறைவா! உன் தகுதி கண்ணியம் பெற்று விட்டது. உன் புகழ் மகத்துவம் பெற்று விட்டது. உன்னுடைய பெயர்கள் தூய்மையாகி விட்டன. இறுதி நாளில் உன்னுடைய அடியார்கள் உன்னுடைய வேதனையிலிருந்து எதன் மூலம் விமோசனம் பெறுவர்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், "காலையிலும் மாலையிலும்,
சுப்ஹான அபதில் அபத், சுப்ஹான வாஹிதில் அஹத், சுப்ஹான ஃபர்திஸ்ஸமத், சுப்ஹான ராஃபிஇஸ் ஸமாயி பிலா அமத், சுப்ஹான மன் பஸதல் அர்ள அலா மாஇன் ஜமத், சுப்ஹான மன் கலகல் கல்க ஃபஅஹ்காஹும் அததா, சுப்ஹான மன் கஸ்ஸமர் ரிஸ்க வலம் யன்ஸ அஹதா, சுப்ஹானல்லதீ லம் யத்தஹித் ஸாஹிபதன் வலா வலதா, சுப்ஹானல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம் யகுன்லஹு குஃப்வன் அஹத்
என்று யார் சொல்கின்றாரோ அவர் என்னுடைய வேதனையை விட்டும் விமோசனம், விடுதலை பெற்று விட்டார்'' என்று அல்லாஹ் பதிலளித்தான் என அபூஹனீஃபா இமாம் சொன்னார்.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 51
அபூஹனீஃபா இமாம் ஒரு தடவை அல்ல. நூறு தடவை பார்த்ததாக ஹனபி மத்ஹபு நூல் கதை அளக்கின்றது; காதில் பூச்சுற்றுகின்றது.
இரு பெரும் பாவங்கள்
ஹனபி நூல் சொல்லும் இந்தக் கட்டுக் கதையில், கைச்சரக்கில் இரு பெரும் பொய்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒன்று, இமாம் அபூஹனீபா அல்லாஹ்வைப் பார்த்தார் என்ற செய்தி. மற்றொன்று, அல்லாஹ் அவருக்கு சில திக்ருகளை, இன்னும் சொல்லப் போனால் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை விட ஒரு பெரிய அத்தியாயத்தை இறக்கினான் என்பது!
இந்த இரண்டு கருத்துக்களுமே மிகப் பெரும் பாவங்களாகும்.
"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 42:51)
இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவதற்கு வகுத்துள்ள இந்த மூன்று வழிகளைத் தவிர வேறு வழியில் அல்லாஹ் பேசினான் என்று யாரும் கூறினாலும் அது தெளிவான பொய் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்) (அல்குர்ஆன் 6:93)
மேலும் இந்தச் சமாச்சாரத்தில் ஒரு விஷ வித்தும் விதைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது சமுதாயத்தை மறுமை நாளின் வேதனையிலிருந்து காக்கின்ற கைங்கர்யத்தைச் சொல்லத் தவறி விட்டார்கள். அந்தத் தவறை அபூஹனீபா நிவர்த்தி செய்கின்றார்கள் என்பது தான் அந்த விஷ வித்து.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைக் காக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இதோ நான் கவனம் செலுத்துகின்றேன் என்ற அதிகப் பிரசங்கித்தனம் தெளிவாகவே தொனிக்கின்றது.
இதில் கிடைக்கின்ற வேறொரு விபரீதம் என்னவெனில், இன்று ஒருவர், "ஐந்து வேளை தொழுகை இல்லை'' என்று அறிவிக்க முடியும். "இதை நீ எப்படி அறிவிக்கலாம்?'' என்று நாம் கேட்கப் போனால் அதற்கு அவர், "கழிந்த இரவில் நான் அல்லாஹ்வைப் பார்த்தேன். அவன் தான் இந்தச் சலுகையை அறிவித்தான்'' என்று தெரிவிப்பார். இது போன்று ஒவ்வொரு இயக்கத்தாரும், தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த, வளப்படுத்த இந்தச் சூத்திரத்தைக் கையாள்வர். எனவே இது போன்ற ஒரு வாசல் திறக்கப்படுவது மிகவும் அபாய கரமானது, ஆபத்தானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைத்தே இன்று அசத்தியவாதிகள் எத்தனையோ விளையாட்டு காட்டுகையில், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, என்ன விளையாட்டு காட்டுவார்கள்?
இப்படித் தான் அபூஹனீபா பெயரைச் சொல்லி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள். இப்படி எவர் சொன்னாலும் நாம் முன் வைக்கும் கேள்வி இது தான். சம்பந்தப்பட்டவர் அல்லாஹ்வைத் தான் பார்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ் என்ற பெயரைச் சொல்லி ஷைத்தான் வர மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை எழுப்புவோம்.
எனவே அபூஹனீஃபா மட்டுமல்ல, உலகில் வேறு எவரும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியாது என்பதே உண்மையாகும்.

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP