அமைப்பின் நோக்கம்
இந்த உலகம் அழிக்கப்பட்ட பின் இறைவான் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி அனைவரையும் விசாரிக்கும் நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கிற்காக நமது அனைத்து வணக்கங்களையும் அனைத்து அறப்பணிகளையும் அமைத்துக் கொள்ளுதல்.
அமைப்பின் கொள்கைகள்.
1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்
.
.
2. மனித குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
அமைப்பின் செயல் திட்டங்கள்
1. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
2. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.
3. முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியை நீக்கும் வகையில் அவர்களுடன் கலந்துறவாடுதல். உண்மை இஸ்லாத்தின் போதனைகளை அவர்களிடம் கொண்டு செல்லுதல்.
4. மதத்தின் பெயரால் பாமர மக்கள் ஏமாற்றப்படுவதையும் சுரண்டப்படுவதையும், மூடநம்பிக்கைகளையும் பிரச்சாரத்தின் மூலம் தடுக்கவும் , மக்கள் விழிப்படையவும் பாடுபடுதல்.
5. பெண்களுக்கு இஸ்லாம் உரிய உரிமைகளை வழங்கியிருந்தும் நடைமுறையில் அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அவர்களுக்கு மீட்டுக்கொடுக்க அயராது உழைத்தல்.
6. அநாதைகள் , முதியோர் கைவிடப்பட்டோர் ஆகியோரின் நலன் காக்கப்பாடுபடுதல்.
7. பத்திரிக்கைகள், மலர்கள், நூற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
8. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
9. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
10. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
11. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
12. தீவிரவதத்தையும் பயங்கரவாதத்தையும் முழு மூச்சுடன் எதிர்த்தல். இதற்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைத்தல்.
13. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்க்கொள்வது.
14. மனித நேயத்தை எடுத்துக்காட்டும் வகையில் அனைத்து மக்களுக்கும் இரத்ததானம் செய்தல்.அது பற்றி ஆர்வமூட்டும் பிரச்சாரம் செய்தல்.
15. மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் வகையில் இலவச மருத்துவ சேவைகள், இலவச ஆம்புலன்ஸ்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் அமைத்தல்.
16. பேரிடர்கள் ஏற்படும் போது மனித நேயத்துடன் களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்.
17. பித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைத் திரட்டி பெருநாள் தினத்தில் எந்த ஏழையும் பட்டினி கிடக்காத வகையில் ஏழைகளுக்கு கண்ணியமான முறையில் விநியோகம் செய்தல்.
தலைமையகம் சிலாபம் கிளை